இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், பிரதமர நரேந்திரமோடி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (21/07/2022) காலை 11.00 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு முடிவுகள் வெளியானது அதில், வேட்பாளர் திரௌபதி முர்மு 50%- க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் திரௌபதி முர்மு. இதையடுத்து, நாட்டின் 15- வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ள திரௌபதி முர்முவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மற்ற இந்திய அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வெளிநாடுகளின் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு, வரும் ஜூலை 25- ஆம் தேதி அன்று காலை பதவியேற்கவுள்ளதாக தகவல் கூறுகின்றன. பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.