தங்கள் நாடுகளுக்கு திரும்ப தனி விமானம் வேண்டும் – வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை

சென்னை நகருக்கு வந்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா” என ஒரு பழைய திரைப்பாடல் உண்டு. “எந்நாடு சென்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா” என ஒரு வரி அதில் உண்டு. அதை நிரூபிப்பது போல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வருடத்துக்கு ஒரு முறையாவது இங்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியா வந்தவர்கள் பலர் தற்போது தேசிய ஊரடங்கால் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாய்நாட்டுக்கு விடுமுறையில் வந்த இந்தியர்கள் திரும்ப தங்கள் நாடுகளுக்கு வர அனுமதி அளித்துள்ளன. இதில் அமெரிக்கா மட்டும் தங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வரலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வெளிநாடு செல்ல வேண்டிய இந்தியர்கள் கிட்டத்தட்ட 300 பேர் உள்ளனர்.

சென்னையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் ஒன்று சேர்ந்து மத்திய விமானப் பயண அமைச்சகத்துக்கு டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் அரசு தங்களுக்காகத் தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு ஒரு நாட்டுக்கு ஒரு விமானம் என ஏற்பாடு செய்தால் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் அமெரிக்காவில் பணி மற்றும் கல்வி விசா பெற்றவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று இந்தியா வந்துள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு இந்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டது.

ஆனால் மற்றவர்கள் தற்போது செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாகச் சென்னையைச் சேர்ந்த அஞ்சனா ரவி என்னும் பெண் தனது நான்கு மாத குழந்தையுடன் சென்னைக்கு வந்திருந்தார். அவருடைய கணவரும் 3 வயது மகனும் அமெரிக்காவில் உள்ளனர். அவர் மார்ச் 26 அன்று கிளம்ப வேண்டியது ஊரடங்கால் கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அஞ்சனா ரவியின் கணவர் பணிபுரிபவர் என்பதால் இவருக்கு பணிபுரிபவர் மனைவி என்னும் எல்2 விசா அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க விதிகளின் படி அஞ்சனாவால் மீண்டும் கணவர் மற்றும் மகனைக் காண செல்லமுடியாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி அவருடைய குழந்தை நேர மாற்றம் காரணமாக தூங்க முடியாமல் தவித்து வருவதாகவும் அஞ்சனா தெரிவித்துள்ளார்.

இவருக்கு ரத்து செய்யப்பட்ட டிக்கெட் பணமும் திரும்பி வரவில்லை, இவர் திரும்பப் போவாரா என்பதும் தெரியாத நிலையில் உள்ளார்.