டெல்லி வந்த 17 இந்தியர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு அறிகுறி – தீவிர சிகிச்சை

covid 19 17 Indians from china corona virus
covid 19 17 Indians from china corona virus

Covid – 19 : சீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள 17 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தனி வார்டில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு நேற்று வரை 1,523 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக சீன அரசு ஹூபெய் பகுதியில் 2 மிகப் பெரிய தனி மருத்துவமனைகளை அமைத்துள்ளது. சீனாவில் 31 மாகாணங்களிலும் இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதல் பரவியுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

உஷார் நிலையில் சென்னை ஏர்போர்ட் – ஒரே நாளில் 1.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சீனா மட்டுமல்லாமல் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது. இதில் இந்தியாவும் ஒன்றாகும்.

இதனிடையே ஜனவரி 17-ம் தேதிக்குப் பிறகு சீனா மற்றும் கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கும் நாடுகளுக்கு டெல்லியில் இருந்து சென்றவர்கள், திரும்பி வந்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டது. அவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

டெல்லி சுகாதாரத்துறையின் தகவலின்படி கடந்த 13-ம் தேதி வரை, சீனா மற்றும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 5,700 பயணிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் இன்னும் பலர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சீனா மற்றும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த பயணிகளில் 4,707 பேருக்கு கரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் மற்றவர்களோடு தொடர்பில் இல்லாமல் சுயகண் காணிப்பில் இன்னும் சிறிது நாட்களுக்கு இருக்குமாறு அவர்களை அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளோம்.

அதேேரத்தில் சீனாவில் இருந்து திரும்பிய 17 இந்திய பயணிகளுக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக டெல்லியின் சாவ்லாவிலும் டெல்லிக்கு அருகே மனேசர் பகுதியிலும் தனி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளை ராணுவமும், இந்தோ திபெத் எல்லைப்பகுதி துணை ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவும் நிர்வகித்து வருகின்றன.

அதேநேரத்தில் சீனாவில் இருந்து டெல்லி திரும்பியவர்களில் இன்னும் 817 பயணிகளைத் தொடர்புகொள்ளவோ, கண்டுபிடிக்கவோ முடியாத நிலை உள்ளது.

சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய 68 பயணிகள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஜனவரி 17-ம் தேதிக்குப் பிறகு சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப் பூர் ஆகிய நாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை ஆய்வு செய்ததில் இதுவரை 21 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் 4,707 பயணிகளுக்கு கரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான பாதிப்பும் அறிகுறியும் இல்லை, அதில் 1,249 பேர் மேற்கு டெல்லியைச் சேர்ந்தவர்கள், 1,073 பேர் மத்திய டெல்லியில் வசித்து வருகின்றனர்.

டெல்லி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கோவிட்-19 வைரஸ் தொடர்பான கட்டுப்பாட்டு அறையை டெல்லி அரசு திறந்து செயல்படுத்தி வருகிறது.

ஜப்பான் கப்பல் அப்டேட் : 5 தமிழர்களும் நலம், நிம்மதி அளித்த வாட்ஸ் அப் வீடியோ

இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “யாருக்காவது கோவிட்-19 வைரஸ் குறித்த பாதிப்பு அறிகுறி தெரிந்தால், அவர்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெறலாம்” என்றார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறும் போது, “இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு மட்டும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அங்கு தனி வார்டில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் மூவருமே சீனாவில் மருத்துவக் கல்வி பயின்று வந்தனர். இவர்களில் ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மற்ற 2 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்றார் அவர்.