இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசி மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மிக விரைவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை வைத்து பரிசோதனை நடைபெற உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது.
பல நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் இந்நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய கிருமித் தொற்று ஆய்வு நிறுவனமும் இணைந்து செயல்பட்டன.
பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசி விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் வெற்றி அடைந்ததை அடுத்து மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையும் வெற்றியடையும் பட்சத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.