கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,770-ஆக அதிகரித்துள்ளது. ஹூபே மாகாணத்தில்தான் இந்த வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனிடையே, கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியா விரைவில் அனுப்பும் என சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி பெய்ஜிங்கில் கூறினார்.
சென்னையின் 2வது விமான நிலையம் – மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்?
சீனாவுக்கு உதவும் வகையிலான இந்த மருத்துவ உபகரணங்களை இந்தியா இந்த வார இறுதியில் விமானம் மூலம் அனுப்புகிறது. எனவே, இந்த விமானம் இந்தியா திரும்பும்போது சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவுக்கான இந்தியத் தூதரம் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த சுட்டுரைப் பதிவுகளில்,
“கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவும் வகையில், இந்த வார இறுதியில் இந்திய அரசு மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் அனுப்புகிறது. வூஹான் அல்லது ஹூபே-வில் இருந்து நாடு திரும்ப விருப்பம் உள்ள இந்தியர்களை இந்த விமானத்தில் ஏற்றிச்செல்ல குறிப்பிட்ட அளவிலான இடமே உள்ளது. ஹூபே மற்றும் வூஹானில் இருந்து நாடு திரும்ப விருப்பம் உள்ள பலர் ஏற்கெனவே கடந்த இரு வாரங்களாக பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர்.
எனவே இந்த விமானம் மூலம் இந்தியா திரும்ப விருப்பம் இருந்து, இதுவரை தூதரகத்தைத் தொடர்புகொள்ளாதவர்கள் +8618610952903 மற்றும் +8618612083629 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது helpdesk.beijing@mea.gov.in என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சீனாவுக்கான இந்தியத் தூதரகம் பதிவிட்ட சுட்டுரைப் பதிவைப் பகிர்ந்து, சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தன்னுடைய ட்விட்டர் பதிவில் “இந்தியா திரும்பும் விமானத்தில் உள்ள இடவசதியைப் பொறுத்து, அண்டை நாட்டினரையும் புதுதில்லிக்கு அழைத்து வர இந்தியா தயாராக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்றார்.