இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உலகறிந்த ஒன்று.
இந்த கொடூர சம்பவத்தில் படுகாயம் அடைந்த நிர்பயா, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து முகேஷ், பவன் குப்தா, வினய் ஆகியோர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் அக்சய் குமார் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுவதாக தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷண், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற மறுசீராய்வு செய்ய இந்த குற்றவாளிகளுக்கு தகுதி இல்லை என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது. அதே நேரத்தில் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஒருவார காலம் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.