சுமார் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு!

பார்லே நிறுவனம் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு ஜிஎஸ்டி அதிகரிப்பே முழு காரணம் என அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி உயர்வால், பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்த நேர்ந்ததாகவும் அதனால் பிஸ்கட் விற்பனை சரிந்ததாகவும் குறிப்பாக கிராமப்புறங்களில் விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் பார்லே குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பார்லே ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மாயங் ஷா அளித்த பேட்டியில், “நாங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்கக் கோரி வருகிறோம். ஆனால், அரசாங்கம் அதை செய்யவில்லை. அரசாங்கம் இதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் 8000 முதல் 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பார்லே நிறுவனம் மட்டும் அல்லாது இந்த மாத தொடக்கத்தில் ப்ரிட்டானியா நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கவும் இருமுறை யோசிகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது” எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியா சமீப காலமாக ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை பல துறைகளில் மந்தநிலையை சந்தித்துள்ளது. இதனால் நிறைய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது.