வெளிநாட்டுச் சிறைகளில் மட்டும் 8,189 இந்தியர்கள் விசாரணை கைதிகளாக இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது!

கடந்த மே 31 ஆம் தேதி நிலவரப்படி வெளிநாட்டுச் சிறைகளில் 8,189 இந்தியர்கள் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளாக உள்ளனர் என்று வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் அவர்கள் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிகபட்சமாக, சவுதி அரேபியாவில் 1,811 பேரும், இதைத் தொடர்ந்து ஐக்கிய அரசு அமீரகத்தில் 1,392 பேரும் மற்றும் நேபாளத்தில் 1,160 பேரும் சிறையில் கைதிகளாக உள்ளனர்.

இன்னும் பல நாடுகளில் அந்தரங்க உரிமை சட்டங்கள் வலுவாக இருப்பதால் சிறையில் உள்ளவர்களின் ஒப்புதல் இல்லாமல் வழக்கு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றனர்.

சில நாடுகள் வெளிநாட்டுக் கைதிகளின் புள்ளிவிவரத்தை வெளியிட்டாலும் விரிவான தகவல்களை தருவதில்லை.

வெளிநாடுகளில் கைதிகளாக உள்ள இந்தியர்களுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் பொது மன்னிப்பு பெறுவதற்கு அங்குள்ள இந்திய தூதரகங்கள் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

2016 முதல் தற்போது வரை வளைகுடா நாடுகளில் மொத்தம் 3,087 இந்தியர்கள் பொதுமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு பெற்றுள்ளதாக அமைச்சர் முரளீதரன் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளார்.