“உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மட்டுமே துணை ராணுவத்தினருக்காக கேன்டீன்களில் விற்கப்படும்”

பொருளாதாரத்தை மீட்க இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என தொலைகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ள நிலையில், துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

துணை ராணுவப்படையில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்களுக்காக செயல்படும் கேன்டீன்களில் ஆண்டுதோறும் 2 ,800 கோடி அளவுக்கு விற்பனை நடக்கும்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நாடு சுயசார்புள்ளதாக மாற வேண்டும். உள்நாட்டில் தயாரிப்பு பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில், துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது, நிச்சயம் வருங்காலத்தில் சர்வதேச தலைமைக்கு இந்தியாவை அழைத்து செல்லும். வரும் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் துணை ராணுவப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 லட்சம் பேர் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவார்கள்.

நாட்டு மக்களும் உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவதுடன், மற்றவர்களையும் அதனை செய்ய வலியுறுத்த வேண்டும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது பின்தங்கி இருப்பதற்கான நேரம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை வாய்ப்பாக மாற்ற வேண்டியதற்கான நேரம். உள்நாட்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என உறுதி ஏற்று கொண்டால், விரைவில் இந்தியா சுயசார்புள்ளதாக மாறிவிடும்,” என்று கூறப்பட்டுள்ளது.