குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக மலேசியா மீது இந்தியா பொருளாதாரத் தடைகளைச் சுமத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத பாம் ஆயில் இந்தியாவிலிருந்து மலேசியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல மின்சாதனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மலேசியாவுக்குச் செல்கின்றன.
இந்தியர்கள் விசா இல்லாமல் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகள் எவை?
இவை இரண்டையும் மலேசியாவுக்கு வழங்குவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனத் அரசு வட்டாரத்திலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. பல்வேறு துறைகளுடன் இது குறித்து ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் முறையாக இந்தியா வர்த்தக உறவு வைத்திருக்கும் நட்பு நாட்டின் மீது இத்தகு பொருளாதாரத் தடை விதிக்கும் திட்டத்தை பரிசீலிப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் விமர்சித்திருந்தார்.
கோலாலம்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் மலேசிய பிரதமர் பேசிய போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மலேசிய பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்தது. “உண்மைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்கள் குறித்து மலேசியா கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். மலேசிய பிரதமரின் கருத்து தவறானது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பல விஷயங்களில் மலேசியா இந்திய அரசுக்கு முரணான நிலைப்பாட்டை கொண்டிருப்பதே பொருளாதாரத் தடை விதிக்கும் திட்டத்துக்கு வித்திட்டிருப்பதாக கூறப்படுகிறது.