தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ், முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ள கட்டரஸ், வரும் 2050ம் ஆண்டுக்குள் 45% அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள ஆண்டோனியோ கட்டரஸ், புதிதாக அனல் மின் நிலையங்கள் அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புவி வெப்பமயமாவதால், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், தாய்லாந்தில் தற்போது 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.