கொரோனா காரணமாக ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் – இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு

உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வைரஸின் பரவல் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்திய ஹஜ் கமிட்டி இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஹஜ் பயணத்துக்கான பணிகளை தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், சவுதி அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயண ஏற்பாடுகளை தொடங்க முடியாத சூழல் நிலவுவதால், 2020ம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஹஜ் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்புவோருக்கு, எந்த பிடித்தமும் இல்லாமல், செலுத்திய 100 சதவீத தொகையும் வழங்கப்படும் எனவும் ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதற்காக, ஹஜ் கமிட்டியின் இணையதள பக்கத்தில் பயண ரத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும், வங்கி பரிமாற்றத்துக்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.