கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமானப் பயணங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் மேலும் 529 பேர் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இரண்டு நாட்களில் மூன்று விமானங்கள் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவதாக ‘இந்தியா இன் சிங்கப்பூர்’ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, கோயமுத்தூர் ஆகிய நகரங்களுக்கு இந்த விமானங்கள் இயக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
As second phase of #VandeBharatMission begins from Singapore , 529 passengers left for Madurai , Trichy and Coimbatore on three flights over two days .
Working to get everyone home sooner n safer … pic.twitter.com/nJnMKpkXkK— India in Singapore (@IndiainSingapor) June 10, 2020
பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறிகள் தென்படுவோர் மருத்துவமனைகளுக்கோ அல்லது சிறப்பு முகம்களுக்கோ அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்றவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அறிகுறி இருந்தால் திருச்சி அரசு மருத்துவமனை அல்லது சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்குச் சென்ற 179 பேருக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், சென்னையைச் சேர்ந்த 7 பேர் என மொத்தம் 28 பேர் மட்டும் திருச்சியில் தனிமைப்படுத்தப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தினர் 30 பேர், திருவாரூர் மாவட்டத்தினர் 44 பேர் உட்பட மற்றவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.