சவுதி அரேபியாவை உலுக்கிய பயங்கர விபத்து; வெளிநாடுகளைச் சேர்ந்த 35 பேர் பலியான சோகம்!

சவுதி அரேபியாவில் கனரக வாகனம் மீது பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா மாகாணத்தில் உள்ள ஹஸ்ரா சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் புனித யாத்திரைக்காக 39 பேர் பயணித்தனர். இந்நிலையில் நேற்று (அக்ட். 16) பேருந்து எதிரே வந்த கனரக வாகனம் மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிலிருந்த பயணிகள் அலறினர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், பயணிகளை மீட்கப் போராடினர். ஆனால் துரதிஷ்டவசமாக 35 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் அல் ஹம்னா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த பேருந்தில் ஆசிய, அரேபியாவைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து சவுதி அரேபியாவை உலுக்கும் வகையில், மிகவும் மோசமான சம்பவமாக அமைந்துள்ளது.