இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, திருச்சி, மதுரை, மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு, கோவை, கண்ணூர் உள்ளிட்ட இந்தியாவின் நகரங்களில் பல்வேறு இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
குறிப்பாக, திருச்சியில் இருந்து சவூதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் திருச்சி மற்றும் குவைத் இடையே கூடுதல் விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூன் 25- ஆம் தேதி முதல் வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டுமின்றி கூடுதலாக சனிக்கிழமைகளிலும் இருமார்க்கத்திலும் விமான நிறுவனம், விமானங்களை இயக்க உள்ளது. திருச்சியில் இருந்து குவைத்துக்கு IX 693 என்ற விமானமும், குவைத்தில் இருந்து திருச்சிக்கு IX 694 என்ற விமானமும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.