இந்தியாவிற்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, தனது நாட்டுக் குடிமக்களுக்கு சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்வோருக்குத்தான், மேற்கத்திய நாடுகள் இது போன்ற எச்சரிக்கைகள் விடுப்பதை வழக்கமாக வைத்திருந்தன. தற்போது இந்தியாவையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (CAA) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தங்கள் நாட்டுக் குடிமக்கள், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வருகின்றன. இதனால் இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
எனவே, முடிந்தவரை இந்தியாவிற்கு செல்வதைத் தவிருங்கள்” என்றும், “இந்த எச்சரிக்கையினை மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒருவேளை சென்றே ஆகவேண்டும் என்றால், அசாமை ஒட்டியுள்ள நாகலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டுள்ளது.