சர்ச்சைக்குரிய நேபாள நாட்டின் புதிய வரைபட சட்டம் – என்ன செய்யும் இந்தியா?

நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதால் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

எல்லை வரைபட பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்ற போதிலும் அதற்கான நேர்மறையான செயல்பாடுகளை எடுக்காமல் உகந்த சூழ்நிலையை உருவாக்காமல் நேபாள அரசு நடந்து கொண்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. இந்தியாவை எதிர்க்க முடிவு செய்த நேபாளம் இதற்காக மேப் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லும்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இந்த புதிய மேப் தொடர்பான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா அங்கு நாடாளுமன்ற கீழ் அவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 57 உறுப்பினர்கள் கொண்ட மேலளவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மசோதாவை அறிமுகம் செய்தது நேபாள அரசு.

இந்த மசோதாவுக்கு எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காததால் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் கணேஷ் திமில்சினா அறிவித்துள்ளார். அந்த மசோதா நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியின் கையொப்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனையடுத்து புதிய வரைபட சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிகாரபூர்வமாக நேபாளத்தின் அனைத்து அரசு ஆவணங்களிலும் செல்லத்தக்க வரைபடமாக திருத்தப்பட்ட வரைபடம் அங்கீகரிக்கப்பட உள்ளது. நோபாளத்தின் இந்த செயல் ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்லை வரைபட பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்ற போதிலும் அதற்கான நேர்மறையான செயல்பாடுகளை எடுக்காமல் உகந்த சூழ்நிலையை உருவாக்காமல் நேபாள அரசு நடந்து கொண்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எல்லைப்பகுதிகளாக இருந்து வரும் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரித்து திருத்தப்பட்ட வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்புற மரியாதையும் மதிக்க வேண்டும் என நேபாளத்துக்கு வலியுறுத்துகிறோம்.

நேபாளத்தின் இந்த தன்னிச்சையான செயல் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான நிலுவையில் இருக்கும் எல்லைப்புற சிக்கல்களை பேசித் தீர்ப்பதற்கு எதிராக இருக்கிறது. இதுபோன்ற செயற்கையாக தனது எல்லையை விரிவுபடுத்திக்காட்டும் நேபாளத்தின் செயலை ஒருபோதும் இந்தியா ஏற்காது என்று ஏற்கனவே இந்தியா தெரிவித்திருந்தது.

இந்திய அரசின் கடும் எதிர்ப்பை காதில் கூட போட்டுக்கொள்ளாத நேபாள அரசு புதிய அரசியல் வரைபடம் தொடர்பான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தே நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஆதரவு அளித்து வந்துள்ளார் தற்போது சட்ட திருத்த மசோதாவிற்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.