தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் – நடிகர் அஜித்தை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்

நடிகர் அஜித்தின் தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம்
தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம்

கடந்த ஆண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருக்கும் வான்வெளி ஆய்வு மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார். ஆளில்லா விமானங்களை உருவாக்க அஜித் எம்.ஐ.டி. மாணவர்களுக்கு வழிகாட்டினார்.

அவரின் உதவியுடன் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தக்ஷா குழு கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும் பெங்களூரில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் மூன்று பிரிவுகளில் பரிசு பெற்றது. ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் தக்ஷா குழுவுக்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தது.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் மூலம் சிவப்பு மணடலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.

ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தொடர்புடைய டாக்டர் கார்த்திக் நாராயணன் பேட்டி ஒன்றில் அஜித்தை பாராட்டியிருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அமைதியாக உதவி செய்து வரும் அஜித்துக்கு நன்றி என்று கார்த்திக் நாராயணன் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவிலும் தக்ஷா குழுவை வைத்து ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினியை தெளிக்கும் பணியை துவங்கியிருக்கிறார்கள். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆளில்லா விமானங்களின் புகைப்படங்களை வெளியிட்டு கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் அஜித்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது, “ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமி நாசினியை தெளிக்க வழி கண்டுபிடித்த நடிகர் அஜித் குமார் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழுவுக்கு பாராட்டுக்கள். கோவிட் 19 போராட்டத்தில் தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“கர்நாடக துணை முதல்வர் பாராட்டியிருக்கிறார். இது தமிழகத்திற்கு பெருமையான தருணம். தக்ஷா குழு கர்நாடகாவில் கிருமிநாசினி தெளித்து நல்ல பெயர் எடுத்துள்ளது” என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்