இந்தியாவின் மும்பை, கொல்கத்தா மற்றும் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் (டி.ஆர்.ஐ) நடத்திய அதிரடி சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளதாக இந்திய ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்க வரி உயர்த்தப்பட்ட நாள் முதல் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்துதான் முன்பு தங்கம் கடத்தி வரப்பட்டது. சமீப காலமாக, சிங்கப்பூர், இலங்கை வழியாகவும் தங்கம் கடத்தி வரப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், கடந்த 8ம் தேதியன்று முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தினர். இந்த திடீர் சோதனைகளில் மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 42 கிலோ தங்கக் கட்டிகளும், 500 கிராம் நகையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.