தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா – எண்ணிக்கை 234 ஆக உயர்வு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது 8 நாட்கள் கடந்துள்ளது. இன்னும் 2 வாரம் ஊரடங்கு நீடிக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று அளித்த பேட்டியில்,”தமிழகம் முழுவதும் 77,330 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 81 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருந்து வெளியில் வந்தவர்கள் எண்ணிக்கை 4,070. தமிழகத்தில் மொத்தம் 17 ஆய்வகங்கள் உள்ளன. இதில் 11 அரசாங்கத்துக்கும், 6 தனியாருக்கும் சொந்தமானது. மேலும் 6 ஆய்வகங்களை இந்த ஒருவாரத்திற்குள் துவங்க முயற்சி எடுத்து வருகிறோம்.

இதுவரை ஆய்வு செய்த மாதிரிகள் 2,726. இதில் 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இன்று(01.04.2020) மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதில் ஒருவர் இந்தோனேசியாவையும், மற்றொருவர் பர்மாவையும் சேர்ந்தவர். இந்த மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 995 பேர் உள்ளனர். இதில் டெல்லி மாநாட்டில் இருந்து 515 பேர் தாமே முன்வந்துள்ளனர். இப்போது மொத்தமாக 1,103 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களது மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாமாகவே முன்வந்துள்ளதால் அனைவருக்கும் என்னுடைய நன்றி. அவர்களில் இதுவரை 658 பேருக்கு மாதிரிகள் எடுத்துள்ளோம். மற்றவர்களுக்கு நாளைக்குள்(இன்று) மாதிரிகள் எடுத்துவிடுவோம்.

மாநாட்டில் பங்கேற்றவர்களில் யாருக்கு கொரோனா தொற்று உள்ளது, அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரின் விவரங்களையும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 1,103 பேருக்கு நெருங்கியவர்களை கண்டறியும் பணியை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஆரம்பித்து விட்டனர். அவர்கள் வீட்டைச் சுற்றி 7 முதல் 8 கிமீ தூரத்தில் உள்ளவர்களை கண்டறிந்து, 50 வீட்டிற்கு ஒரு ஆள், அதில் 4 பேருக்கு ஒரு சூப்பர்வைசர் அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. இதன்மூலம் மற்ற இடங்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும்.

வீட்டிலேயே இருக்கும் வயதானவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் முடிந்த அளவு தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று வருவோரும், அவர்களிடம் செல்லக்கூடாது. சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் கர்ப்பிணி பெண்கள் கடந்த 2 மாதத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக தனி திட்டம் வைத்துள்ளோம். அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளுக்காக தனி திட்டம் வகுக்க கூறியிருக்கிறோம். யார், யார் தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளார்களோ, அவர்களுக்கு சுகப்பிரசவம் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கூறியிருக்கிறோம்.

நேற்று கண்டறியப்பட்ட நபர்கள் 15 மாவட்டங்களில் இருக்கின்றனர். அவர்களில்,கோயம்புத்தூர்-28, தேனி-20, திண்டுக்கல்-17, மதுரை-9, திருப்பத்தூர்-7, செங்கல்பட்டு-7, திருநெல்வேலி-6, சிவகங்கை-5, தூத்துக்குடி-2, திருவாரூர்-2, ஈரோடு-2, காஞ்சிபுரம்-2, கரூர்-1, திருவண்ணாமலை-1, சென்னை-1 என மொத்தம் 110 பேர். டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்கள் 19 மாவட்டத்தில் இருக்கின்றனர். 1,103 பேருக்கு சோதனை நடத்தப்படும். ஒருநாளைக்கு 5 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ய முடியும். எத்தனை பேர் வந்தாலும் சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

டெல்லி மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். 1131 பேர் தமிழகம் திரும்பியதாகவும், அவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் தங்கியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் நேற்று முன்தினம் வரை 513 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் இருந்து திரும்பிய மீதம் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1103 பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதில் இதுவரை 658 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் மொத்தமாக டெல்லி சென்று திரும்பியவர்கள் 190 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் நேற்று மட்டும் 110 பேருக்கும் தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மீதம் உள்ள 445 பேருக்கு நேற்று இரவு மற்றும் இன்று காலையில் பரிசோதனை நடந்து வருகிறது. இன்று மாலை அவர்களுக்கான முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் மருத்துவமனைக்கு வராமல் இருக்கலாம் என்றும் அவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறதென்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.