வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நற்செய்தி – சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம்

சென்னையில் 2வது விமான நிலையத்தை சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையம் அமைக்க விரிவான திட்டப் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸால் கைவிடப்பட்ட ஜப்பான் கப்பல் – தமிழர்களின் நிலை என்ன?

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் 2-வது விமான நிலையத்தை அமைக்க விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாமண்டூர் மற்றும் செய்யூருக்கு இடையே உள்ள பகுதியும் காஞ்சிபுரத்துக்கும், அரக்கோணத்துக்கும் இடையிலுள்ள பரந்தூர் ஆகிய இரு இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், 2-வது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தை உருவாக்குவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக இன்னும் ஒருவார காலத்திற்குள் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. அதில், தேர்வு செய்யப்படும் நிறுவனம் விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதையடுத்து, விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த வெளிநாடுகளில் எவ்வளவு இந்தியர்கள் வசிக்கிறார்கள் தெரியுமா?

மொத்தம் 4,500 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் இடமாகவும், சரக்குகளைக் கையாளும் இடமாகவும் இருக்கும். பசுமைவெளி விமான நிலையமாக அமைய உள்ள இங்கு நட்சத்திர விடுதிகளும் அமைய உள்ளன. விமான நிலைய பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டனர்.

Source – Tamil Online Website