‘வந்தே பாரத்’ திட்டம் – சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள்!

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் இதுவரை 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதுவரை முதல்கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்து 2-வது கட்டம் நடந்து வருகிறது. இந்த 2-வது கட்டம் வரும் 13ம் தேதி வரை இருக்கும். முதல் கட்ட திட்டம் மே 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் கப்பல், விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள். 2-வது கட்ட வந்தே பாரத் திட்டம் மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சொல்லப்பட்டு பின்னர் ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவாது, “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும். தற்போது 107 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 165 விமானங்கள் இயக்கப்படும். ஜூன் 30-ம் தேதி வரை இந்த விமானங்கள் இயக்கப்படும்” என்று அவர் கூறினார். இதற்கிடையில் 3-வது கட்ட வந்தே பாரத் திட்டத்துக்காக மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.