இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் சொந்த நாடு செல்ல முன்பதிவு தொடங்கியது ஏர் இந்தியா

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமானம் உட்பட எந்த ஒரு போக்குவரத்து சேவைகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில் இந்தியாவிலிருந்து தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவினை தொடங்கியுள்ளது.

இதுபற்றி இந்திய அரசு கூறியிருப்பதாவது: பணி மற்றும் சுற்றுலா காரணமாக இந்தியா வந்து, ஊரடங்கு காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவரை அனுப்பிவைக்கும் பணியையும் இந்திய அரசு துவங்கியுள்ளது.

அத்தகைய வெளிநாட்டவர்கள் மே 07 தொடங்கி வரும் மே 14 வரை விமான முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் வண்ணம் “வந்தே பாரத்” என்ற திட்டத்தின் கீழ் இங்கிருந்து அனுப்பப்படும் விமானங்களில் இவர்கள் கூட்டிச்செல்லப்படவுள்ளனர்.

டிக்கெட் கட்டணமாக அமெரிக்கா செல்வதற்கு ஒருவருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பிரிட்டனுக்கு 50 ஆயிரம் ரூபாயும், சிங்கப்பூருக்கு 20 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.